Sunday, January 17, 2016

கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்?

அஸ்ஸலாமு அலைக்கும் 
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
கேள்வி:
ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும் தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறுவதுடன் அதற்கு மருத்துவம் செய்யுவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்?

பதில்:
மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன. வறுமை, அழகின்மை,
உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை. வலிமையானவர்களின் அடக்கு முறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத்திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதங்கள் உள்ளன.

நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள். மேலே சுட்டிக்காட்டியது போன்ற ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது. நமக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். ஆனால் செல்வமும் ஆரோக்கியமும் உள்ளவருக்கு எந்தக் குறைவும் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவருக்கு பொறுத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான். நீங்கள் நோயை நினைத்து கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்து கவலைப்படுவார். மனதை உறுத்துகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது.

இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும் நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போகமாட்டோம் நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம் அனைவரும் சோத்துக்கு இல்லாமல் செத்திருப்போம். எல்லோரிடமும் கோடி ரூபாய் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள். அனைவரும் அழிவது தான் நடக்கும். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும் நிறையையும் இறைவன் வழங்கி கருணை புரிந்துள்ளான்.

நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. வியாபாரியின் மூலம் விவசாயி மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான். எத்தனையோ கோடீஸ்வரர்கள் தினம் இரண்டு இட்லிதான் சாப்பிடவேண்டும் மாமிசம் எண்ணெய் தொடக்கூடாது என்று மருத்தவர்களால் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். கோடி கோடியாக இருந்தும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடிவதில்லை. கிடைக்கிற அனைத்தையும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழை இந்த வகையில் இவனை விடச் சிறந்தவன் இல்லையா?

இதுபோல் வறுமையும் நோயும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை உண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நோயற்றவர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு வசதி, வாய்ப்பு, பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருப்பதை உணருவார்கள். அப்போது இறைவன் எத்தகைய கருணைக் கடல் என்பதை சந்தேமற அறிவார்கள். 
http://pleasingpath.blogspot.com
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!