Saturday, May 7, 2016

இஸ்லாத்தின் பார்வையில் உலகவாழ்க்கை


 ஆலிஃப் அலி ஆலிஃப் அலி
[மனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக் கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோ இச்சையின் பிரகாரம் வாழ்ந்துவிட்டுப் போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாக அவனது வாழ்வு இறை வழிகாட்டலின் கீழ் அமையவேண்டும். இவ்வுலகில் நமது பணி என்ன என்பதை விளங்கவேண்டும்.

இறைவனது அருட்கெடைகளையெல்லாம் பூரணமாக அனுபவித்துவிட்டு செருக்குக் கொள்கின்றான். ஆடம்பரத்தில் ஆடுகின்றான். இறைவனையும் நிராகரிக்கின்றான். அவனது பார்வையில் உலகம் என்பது வெறுமனே இன்பமனுபவித்துவிட்டுச் செல்லும்
ஓர் இடம். ஏனெனில் நிரந்தரமான உயர்ந்த மறுமையின் சுவன வீட்டை அவன் மறுக்கிறானல்லவா? அதனால்தான் இது அற்பமானதென்பதை விளங்காதிருக்கின்றான். ]
மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்தாம் இவ்வுலகில் பகட்டு வாழ்ககை வாழ்கின்றனர். இது நிரந்தரமானதல்ல என அறிந்த போதிலும் தமது மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு அதன்படி வாழ்ந்து மடிகின்றனர்.
இப்பிரபஞ்சப் படைப்புகளிலே உயர்ந்த அறிவார்ந்த படைப்பு மனிதனென்று உறுதியாகக் கூறலாம். அவ்வாறான மனிதன் இவ்வுலகில் வெறும் உடலிச்சைகளையும் மனோ இச்சைகளையும் மாத்திரம் தீர்த்துக்கொண்டு அவன் படைக்கப்பட்டதன் சரியான நோக்கத்தை புறிந்து கொள்ளாமல் பொருளாதாரத்தை ஈட்டுவதில் தனது குறுகிய ஆயுளைச் செலவு செய்துவிட்டு இறந்துவிடுவதென்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.
மனிதன் இவ்வுலகம்தான் சுவர்க்கம் என நினைத்து இதன் மீதுவைத்துள்ள அபரிமிதமான விருப்பின் காரணமாக (ஹுப்புத் துன்யா)அவனுக்கு வழிகாட்ட வந்த வழிகாட்டிகளையும் நிராகரித்துவிட்டு, அவனைப் படைத்த இறைவனையும் நிராகரித்துவிட்டு மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக் கின்றான்.
உண்மையில் இது நிரந்தரமான வாழ்க்கையல்ல. அதே போன்றுமனிதன் உலக இன்பங்களை அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவனுமல்ல. இவ்வுலகில் அவன் அனுப்பப்பட்டதற்கான ஓர்உயரிய நோக்கம் உண்டு. மனிதனின் நிரந்தரமான வாழ்க்கை மறுமையில்தான் அமைகின்றது. இம்மை என்பது வெறும் தற்காலிகத் தங்குமிடம்தான். இவ்வுலகம் பெறுமதியற்றது, கவர்ச்சித்தன்மை கூடியது, வீணும் விளையாட்டும் நிரம்பியது. அல்லாஹ்விடத்திலும் நபியவர்களிடத்திலும் இவ்வுலகம் மதிப்பற்றது. இதனைச் சில அல்குர்ஆனிய வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
"(மனிதர்களே!) அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வுலக வாழ்ககையெல்லாம் விளையாட்டும் வீணும் அலங்காரமும் உங்களுக்கு மாத்தியில் பெருமையடித்துக்கொள்வதும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் அதிகப்படுத்திக் கொள்வதும்தான்..." (அல்குர்ஆன் - அல்ஹதீத்: 20)
மற்றுமோரிடத்தில்"இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிரவேறில்லை" (அல்குர்ஆன் - ஆலஇம்ரான்: 185) பிரிதோரிடத்திலும் அல்லாஹ் கூறுகிறான். "மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்குநிச்சயமாக மறுமையின் வீடுமேலானதாகும்" (அல்குர்ஆன் - அல்அன்ஆம்: 32)
உலகம்பெருமதியற்றது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் நடைமுறை உதாரணத்தின் மூலம் குறித்துக்காட்டினார்கள். ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்கள் புடைசூழ கடைத்தேருவொன்றைக் கடந்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே செத்து, காதுகள் அருந்து கிடந்த ஓர் ஆட்டைக் கண்டார்கள். உடனே அதனை நெருங்கி அதன் காதைப் பிடித்துக்கொண்டு "உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்கு வாங்கவிரும்புவார்?" என்றுகேட்டார்.
அதற்கு அம்மக்கள்"நாம் அதனை வாங்கிவிரும்ப மாட்டோம். அதனை வைத்து நாம் என்ன செய்வோம்?" என்று கேட்டனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பமாட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு மக்கள் "அல்லாஹ்வின் மீதானையாக உயிரோடு இருந்தாலும் இது காதருந்த குறையுள்ள ஒருஆடு. அவ்வாறிருக்க செத்த நிலையில் எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்?)" எனக் கேட்டனர்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அவ்வாறாயின் அல்லாஹ்வின் மீதானையாக இந்தச்செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் அற்பமானது" என்றார்கள் (நூல்: முஸ்லிம்)
முடிவாக மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்தும் ஹதீஸினூடாகவும் உலகம் எனபது அற்பமானதும் கவர்ச்சிகரமானதும்தான் என்பதைப் புறிந்து கொள்ளமுடிகிறது. மறுமைக் காட்சிகளை அவர்கள் காணும் போது சொற்பகாலமே வாழ்ந்ததுபோல்; உணர்வார்களென குர்ஆன் கூறுகின்றது.
"அதனை அவர்கள் காணும் நாளில் மாலையிலோ அல்லது அதன் முற்பகலிலோ (ஒரு சொற்ப நேரமே) தவிர (பூமியில்) தங்கியிருக்காதது போன்று (அவர்கள் உணர்வார்கள்)" (அல்குர்ஆன் - அந்நாஸிஆத்: 46)
அல்குர்ஆனும் அல்ஹதீஸும் இவ்வாறு கூறும் அதே சமயம் மனித ஆன்மாவின் பயணத்தொடரை கணிபபிட்டுப் பார்ப்பதனூடாகவும் வித்தியாசமானதொரு முறையில் இந்த உண்மையை விளங்கலாம்.சற்று சிந்தனையை சிறகடிக்கவைப்போம்.
மனிதன் என்ற பதப்பிரயோகம் இப்பூமியில்தான் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்குமுன்னுள்ள கட்டங்களிலும் பின்னுள்ள கட்டங்களிலும் "ஆன்மா(ரூஹ்)" என்றே குறிக்கப்படுகின்றது. மனித ஆன்மா ஆறு கட்டநிலைகளைக் கடந்துதான் வேதனைமிக்க அல்லது இன்பம் சொட்டும் அழிவேயற்ற நிரந்தரமான வாழ்வை அடைகின்றது. இவ்வுலக வாழ்வென்பது ஆன்மாவின் நீண்ட பயணத்தொடரின் மூன்றாம் கட்டநிலையாகும். இம்மூன்றாம் கட்ட நிலையை ஏனைய கட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது சொற்ப காலம்தான் என்பதை விளங்கலாம். ஆன்மாவின் அந்த ஆறு கட்டப் பயணத் தொடரை பின்வரும் வரைபின் மூலம் விளங்கலாம்.
இவ்வரைபின் ஒவ்வொரு கட்டத்தையும் சற்று விரிவாக நோக்குவோம்.முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்துஅவருக்கு ரூஹை (ஆன்மாவை) ஊதியதன் பின்பு அவரிலிருந்து மறுமை நாள் நிகழும் வரையிருக்கும் இருதி மனிதன் வரையுள்ள அனைவரதும் ஆன்மாக்களைப் படைத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான். "நபியே உமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களது முதுகளிலிருந்து அவர்களது சந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தமக்கே சாட்சியாக்கி அவர்களிடம் நான் உங்கள் இரட்சகனல்லவா? என்று (கேட்ட) சமயத்தில்..." (அல்குர்ஆன் - அல்அஃராப்:172) அவ்வான்மாக்கள் இருக்குமிடம் "ஆலமுல் அர்வாஹ்" (ரூஹ்களின் உலகம்) என அழைக்கப்படுகின்றது. இதுவே ஆன்மாக்களின் பயணத்தொடரின் ஆரம்பகட்டம். இதில் ஒரு ஆன்மா தங்கியிருக்கும் காலமோ மிக நீண்டது. எவ்வளவெனின் இன்றொரு குழந்தை பிறக்குமென்றிருந்தால் அதன் ஆன்மா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்ததிலிருந்து தாயின் கருவரையில் சேர்க்கப்படும்வரை எண்ணிப்பார்க்க முடியாத காலங்கள் ரூஹ்களின் உலகத்தில் தங்குகின்றது.
ஆன்மா இரண்டாம் கட்டமாக தாயின் கருவரையை அடைகின்றது. இங்கு பொதுவாக நான்கு அல்லது ஐந்து மாதங்களே தங்கியிருக்கும். இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். "ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போது அதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பி வைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில் அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்து விடுகின்றார்." (நூல்: முஸ்லிம்)
தாயின் கருவரையிலிருந்து இப்பூவுலகை அடைகின்றது அவ்வான்மா. இதுதான்மிக முக்கிய இடம். ஆன்மாக்கள் எந்நோக்கத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டனவோ அந்நோக்கத்தை சரியாக நிறைவேற்ற வேண்டிய இடம் இதுதான். அல்லாஹ்விடம் ஆன்மாக்கள் ஆலமுல் அர்வாஹில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய இடம். இதில் ஆன்மா இறை வழிகாட்டலையும் அவன் தூதரின் போதனைகளையும் ஏற்றுப்பின்பற்றி வாழந்தால் அதன் அடுத்த கட்ட நகர்வுகள் சுபீட்சமானதாக அமையும். மாறாக அவற்றைப் புறக்கனித்து வாழ்ந்தால் வேதனைமிக்கதாக அமையும்.
இவ்வுலக வாழ்க்கை என்பது இரண்டு பாதைகளைப் பிரிக்கும் ஒரு சந்தி (Junction). தொடர்ந்து ஒரே பாதையில்(One way) வந்த ஆன்மா இங்கிருந்து பிரியும் இரு பாதைகளில் ஏதாவதொரு பாதையின் மூலமே செல்லமுடியும். அல்லாஹ் இந்த இரண்டு பாதைகளையும் மனிதனுக்குக் காட்டித்தந்துள்ளான். அவன் கூறுகின்றான். "(நன்மை, தீமையாகிய) இரு பாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்து விட்டோம்." (அல்குர்ஆன் - அல்பலத்: 10) மற்றும் ஸூரதுத்தஹ்ரின் மூன்றாம் வசனத்தில் "நிச்சயமாக, நாம் அவனுக்கு(நல்லது, தீயது பற்றிய) வழியைத் தெளிவு செய்தோம், (அதைப்பின்பற்றி) அவன் ஒன்று நன்றியுள்ளவனாக இருக்கலாம், அல்லது (அதனைப் பின்பற்றாது) நன்றிகெட்ட (நிராகரிப்ப)வனாக இருக்கலாம்." என்று கூறுகின்றான்.
இவ்விரு பாதைகளில் ஒன்று நரகின் பாதை மற்றையது சுவனத்தின் பாதை. (மேற்குறிப்பிட்ட வரைபை அவதானிக்கவும்) எனவே இதில் நாம் சுவனத்திற்கான நேரான பாதையைத் தெரிவு செய்யவேண்டும். மாற்றமாக இவ்வுலகை சுவனமாக எண்ணி மனம்போன போக்கில் வாழ்வது நேரெதிரான நரகின் பாதையைத் தெரிவு செய்ததாய் அமையும். எனவேதான் அல்லாஹ் தனது கட்டளைகளின் பிரகாரம் உலகில் வாழுமாறும் உலகக் கவர்ச்சிகளில் மூழ்கிவிட வேண்டாமென்றும் கூறி உலக வாழ்க்கை அற்பமானது என்று கூறுகின்றான்.
"இம்மை மறுமையின் விளைநிலம்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதற்கிணங்க, மறுமைக்கான கட்டுச்சாதனங்களை இங்குதான் தயார் செய்துகொள்ள வேண்டும். உலகம் எனும் இத்தேர்வுக்களத்தை நல்ல முறையில் எதிர்கொண்டால்தான் முறுமையில் சிறந்த பேருகிடைக்கும். ஆன்மாவின் பயணத்தில் அது பூமியில் தங்கும் காலம்தான் மிகச் சொற்பமானது. இதனை ஏனைய காலகட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கலாம். எனினும் மனிதன் இங்குதான் தவறிழைக்கின்றான்.
இறைவனது அருட்கெடைகளையெல்லாம் பூரணமாக அனுபவித்துவிட்டு செருக்குக் கொள்கின்றான். ஆடம்பரத்தில் ஆடுகின்றான். இறைவனையும் நிராகரிக்கின்றான். அவனது பார்வையில் உலகம் என்பது வெறுமனே இன்பமனுபவித்துவிட்டுச் செல்லும் ஓர் இடம். ஏனெனில் நிரந்தரமான உயர்ந்த மறுமையின் சுவன வீட்டை அவன் மறுக்கிறானல்லவா? அதனால்தான் இது அற்பமானதென்பதை விளங்காதிருக்கின்றான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "எனது உம்மத்தின் வாழ்க்கை 60-70 வயதுக்கு இடைப்பட்டதாகும்" (நூல்: திர்மிதி)
இந்த ஹதீஸ் குறிப்பிடும் இவ்வுலகில் ஆன்மாவின் வயதெல்லையையும் அது தங்கும் ஏனைய கட்டங்களின் கால அளவையும் ஒப்பிடுகையில் இது குறுகிய காலம்தான். உடலை விட்டுப் பிரியும் ஆன்மா அடுத்து ஆலமுல் பர்ஸகை அடைகின்றது. ஆலமுல்பர்ஸக் என்பது மரணத்திற்கும் மறுமைக்கும் இடைப்பட்ட வாழ்க்கை. மரணித்த ஒருவரது ஆன்மா நல்லதாக இருந்தால் அது இல்லிய்யீனிலும் அதுவே கெட்டதாக இருந்தால் ஸிஜ்ஜிய்யீனிலும் பதியப்பட்டதன் பின்பு பர்ஸகிலே சேர்க்கப்படும். இங்கும் ஆன்மாக்கள் நீண்டகாம் தங்கியிருக்கும். எவ்வாறெனின் ஆலமுல் அர்வாஹிலிருக்கும் ஆன்மாக்கள் அனைத்தும் பூமியை அடைந்து பின்பு பூமையை அடைந்தவையெல்லாம் மரணித்து ஆலமுல் பர்ஸகை அடைந்து மறுமை நாளாகும்வரை ஏற்கனவே பர்ஸகை அடைந்த ஆன்மாக்கள் நீண்டதொரு கால இடைவெளியில் தங்கியிருக்கும். இங்கு நல்ல ஆன்மாக்கள் இன்பத்தையும் கெட்ட ஆன்மாக்கள் வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருக்கும்.
ஆலமுல் பர்ஸகில் இருந்த ஆன்மாக்கள் அடுத்தகட்ட நகர்வாக மஹ்ஷர்வெளியை அடையும். பூவுலகில் செய்த நன்மைக்கும் தீமைக்குமேற்ப கூலிவழங்கப்படும் தீர்ப்பு நாள்தான் மஹ்ஷருடைய நாள். அது ஒரு மாபெரும் திடல். முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து இருதி மனிதன்வரை அனைவரும் அங்கு திரண்டிருப்பார்கள். அனைத்து ஆன்மாக்களும் மீண்டும் அவற்றுக்கான புதிய உடல்களில் நுழைவிக்கப்பட்டிருக்கும். அவ்வுடல்கள் மறுமையின் வேதனையையோ அல்லது இன்பத்தையோ அனுபவிக்கும் சக்தியைப்பெற்றிருக்கும்.
அல்லாஹ் கூறுகின்றான். "ஆன்மாக்கள் (அவற்றின் உடல்களோடு) ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும்போது." (அல்குர்ஆன் - அத்தக்வீர்: 07) இங்கும் ஆன்மாக்கள் மிக நீண்டகாலம் தங்கியிருக்கும். அது இத்துனை வருடங்கள்தான் என்று குறிப்பிட்டுக்கூற முடியாது. அதனை அல்லாஹ்தான் அறிவான். எனினும் இது தொடர்பாக இரண்டு குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடலாம்.
1. மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 1000 வருடங்களுக்குச் சமன். "நிச்சயமாக உம் இரட்சகனிடத்தில் ஒருநாள் நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றதாகும்." (அல்குர்ஆன் - அல்ஹஜ்: 47)
2. மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 50,000 வருடங்களுக்குச் சமன். "மலக்குகளும் ஜிப்ரீலும் இவன் பக்கம் ஒருநாளில் உயர்ந்து செல்வார்கள். அதன் அளவு ஐம்பதுநாயிரம் வருடங்களாகும்." (அல்குர்ஆன் - அல்மஆரிஜ்: 04)
இவ்விரு வசனங்களும் வித்தியாசமான கால அளவைக் காட்டினாலும் தப்ஸீர் அறிஞர்களின் கருத்துப்படி ஒரு முஸ்லிமுக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின் ஆயிரம் வருடங்களுக்குச் சமனாகவும் ஒரு காபிருக்கு மஹ்ஷரின் ஒருநாள் இம்மையின் ஐம்பதுநாயிரம் வருடங்கள்குச் சமனாகவும் இருககும் என ஒரு கருத்துக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் எவ்வளவு காலம் எனஎமது குறிகிய அறிவால் சரியாகக் குறிக்துக் கூற முடியாது. ஆனாலும் ஒரு கணிப்பீட்டுக்காக ஒரு முஸ்லிம் ஐந்து நாட்கள் தங்குவதாகக் கொண்டால் அது இப்பூமியின் ஐந்தாயிரம் வருடங்களுக்குச் சமன். இதுகூட பூவுலக வாழ்வைவிட நீளமானதே!
ஆன்மாவின பயணத்தொடரின் இக்கட்ட வாழ்வுதான் நிரந்தரமானது. ஒவ்வொரு ஆன்மாவும் பூமியில் எவ்வகையான வாழ்க்கையை வாழ்ந்ததுவோ அதற்கு ஏற்றதான வாழ்கை இங்கு பெற்றுக்கொள்ளும். உலகில் இஸ்லாம் கூறிய பிரகாரம் வாழ்ந்து நன்மைகள் புரிந்து இறை திருப்தியைப் பெற்றிருந்தால் அந்த ஆன்மா சுவனத்தை அனந்தரமாகக்கொள்ளும். இதற்குப் புறம்பான வாழ்வை வாழ்ந்தால் வேதனைகள் மிகுந்த நரகை ஒதுங்குமிடமாகப் பெற்றுக்கொள்ளும். இங்கு வாழும் வாழ்க்கைக்கு முடிவே இல்லை.
ஆக ஆன்மாவின் இந்த ஆறு கட்ட பயணங்களையும் எடுத்து நோக்கினால் மிகக் குறைந்த கால வாழ்க்கை பூமியிலேயே அமைகின்றது. இந்த சொற்பமான வாழ்க்கை அற்பமானதுதான். ஆரம்பத்தில் கூறியதுபோன்று மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு பாதைகளும் இரண்டு விருப்பு, வெறுப்புகளைக் கொண்டது. ஒன்று; இறை விருப்பு, வெறுப்பு. மற்றையது மனித விருப்பு, வெறுப்பு. இதில் மனித விருப்பு, வெறுப்புகளுக்கு முன்னுரிமையளித்தவன் நரகின் பாதையைத் தெரிவு செய்வான். இறை விருப்புக்கும் வெறுப்புக்கும் முன்னுரிமையளித்து அதன்படி வாழ்ந்தவன் சுவனப் பாதையைத் தெரிவு செய்தவனாவான்.
அல்லாஹ் கூறுகின்றான்: "யார் தனது இரட்சகனின் சந்நிதியைப் பயந்து தனது விருப்பு வெறுப்புகளிலிருந்தும் தனது உள்ளத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவன் ஒதுங்குமிடம் நிச்சயமாக (நிரந்தர இன்பங்கள் நிரைந்த) சுவனம்தான்" (அல்குர்ஆன் 69: 40,41)
எனவே நாம் இந்த உலகினதும் மனித வாழ்வினதும் யதார்த்த நிலையை விளங்கவேண்டும். உண்மையில் உலக வாழ்க்கை வீணும் வேடிக்கையும் நிறைந்தது. ஆற்பமும் சொற்பமும் விளைந்தது. ஆனால் இதுதான் மனித ஆன்மாவின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு சந்தி. எனவேதான் இந்த உலக வாழ்வில் மனிதனை ஒரு வழிப்போக்கனைப்போல் வாழுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
"நீங்கள் உலகத்தில் ஓர் அண்ணியனைப்போல் அல்லதுஒரு வழிப்போக்கனைப் போல் இருங்கள்." (நூல்: புகாரி)
மலக்குல் மௌத் இப்பூமியில் 950 வருடங்கள் வாழ்ந்த நூஹ் நபியிடம் வந்து "நீர்எவ்வளவு காலம் இங்கு வாழ்ந்தீர்?" என்று கேட்டதற்கு "ஒரு வீட்டின்முன் வாயிலால் நுழைந்து பின் வாயிலால் வெளியேளியது போன்ற காலம்தான்." என்றார்கள். ஆல்குர்ஆனும் இதனையே கூறுகின்றது.
"ஆண்டுகளின் எண்ணிக்கையால் நீங்கள் எவ்வளவு காலம் பூமியில் தங்கினீர்கள்?" என்று அவன் கேட்பான். அதற்கவர்கள் "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியே தங்கியிருப்போம்" என்பார்கள்." (அல்குர்ஆன் 23: 112,113)
அது மட்டுமன்றி அல்லாஹ்விடத்தில் ஈயின் இறக்கையிலும் அற்பமானது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "இந்தஉலகம் அல்லாஹ்விடத்தில் ஓர் ஈயின் இறக்கையளவு பெருமதியாக இருக்குமென்றால் அவனை நிராகரிக்கும் மனிதனுக்கு தண்ணீரும் கொடுக்கமாட்டான்." (நூல்: திர்மிதி)
ஆக மனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக் கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோ இச்சையின் பிரகாரம் வாழ்ந்துவிட்டுப் போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாக அவனதுவாழ்வு இறை வழிகாட்டலின் கீழ் அமையவேண்டும். இவ்வுலகில் நமது பணி என்ன என்பதை விளங்கவேண்டும். அதன்படி செயற்பட்டு நிரந்தர சுவனபதியை அனந்தரமாகக் கொள்வோம்
 source: aliaalif.blogspot.com

Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!