Thursday, January 29, 2015

வந்த வழியில் திரும்பியோர்

  rasminmisc   

["(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?" (அல்குர்ஆன் 10 : 99)
"நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால்அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்." (அல்குர்ஆன் 5 : 54)
எவரையும் வைத்து இந்த இஸ்லாமிய மார்க்கம் கிடையாது, இறைவனின் அருளினால் இவ்வுலகுக்கு வழங்கப்பட்ட மார்க்கமாக இருக்கும் இப்புனித வழிகாட்டலை யாரும் அழித்து விட முடியாதுஎன்பது வரலாற்று உண்மையாக இருக்கின்றது.]

வந்த வழியில் திரும்பியோர்
பொதுவானவை மனிதனை இவ்வுலகில் படைத்து, பரிபாலனம் செய்து வரும் இறைவன் இஸ்லாம் என்ற இனிய மார்க்கத்தை மனிதர்களின் நேர்வழிக்காக வழங்கி அதன் படி நடக்க வேண்டும் என்று கூறுகின்றான்.
அந்த வகையில் யார் எல்லாம் இறைவனின் வார்த்தைகளையும், நபியவர்களின் வழிகாட்டல்களையும் பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்கள் தான் வெற்றிபெற்றவர்கள் என்று இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றான்.
புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் இந்த மார்க்கம் யாரையும் நிர்பந்தம் செய்யும் வழிகாட்டல் அல்ல. மாறாக யார் மறுமையில் வெற்றி பெற்று நிரந்தரமான சுவர்க்க வாழ்வை அனுபவிக்க விரும்புகின்றாரோ அவர் இந்த மார்க்கத்தை பின்பற்றலாம். யார் விரும்பவில்லையோ அவர்கள் இதனை புறக்கனிக்கலாம், இஸ்லாம் நிர்பந்தம் செய்து இந்த மார்க்கத்தினை யாரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை.
"இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்." (அல்குர்ஆன் 2 : 256)
"இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்". (அல்குர்ஆன் 18 : 29) 
"(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?" (அல்குர்ஆன் 10 : 99)
மேற்கண்ட வசனங்களில் இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் கிடையாது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். நஷ்டப்படாத இறைவனின் நியதி இந்த உலகத்தில் வாழுகின்ற மனிதர்கள் அனைவருமோ அல்லது அவர்களில் பலரோ, சிலரோ இறைவனின் கட்டளைகளை பின்பற்றாவிட்டால், அல்லது புறக்கனித்து விட்டால் இறைவனுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்படப் போவதில்லை. மாறாக இறைவனிக் கட்டளைப்படி வாழ்பவர்களுக்கு நன்மை தான் விளையப் போகின்றது.
"நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்." (அல்குர்ஆன் 5 : 54)
"தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப் படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்." (அல்குர்ஆன் 3 : 86)
இந்த இஸ்லாமிய மார்க்கம் தெளிவானது, யார் இதனை பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன. வந்த வழியில் திரும்பியோர் நாம் வாழும் இக்காலத்தில் இஸ்லாத்தை பின்பற்றுவதாக கூறுபவர்கள் பின்னர் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறிச் செல்வதையும், ஏகத்துவக் கொள்கையில் பிடிப்பாக இருந்த சிலர் கூட இக்கொள்கையை விட்டும் தடம் புரண்டு செல்வதையும் நாம் காணக் கிடைக்கின்றது. இப்படியானவர்கள் இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவக் கொள்கையையும் புறக்கணித்து விடுவதினால் இஸ்லாத்திற்கு எவ்வித நஷ்டமும் ஏற்பட்டு விடாது என்பததையும் இதனால் இந்த ஏகத்துவக் கொள்கையை அழிந்து விடும் என்றும் யாரும் எண்ணிவிடலாகாது.
எவரையும் வைத்து இந்த இஸ்லாமிய மார்க்கம் கிடையாது, இறைவனின் அருளினால் இவ்வுலகுக்கு வழங்கப்பட்ட மார்க்கமாக இருக்கும் இப்புனித வழிகாட்டலை யாரும் அழித்து விட முடியாது என்பது வரலாற்று உண்மையாக இருக்கின்றது.
ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி கொடுத்தார். மறு நாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். (இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள் என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள் நூல் : புகாரி (1883)
அப்போது தான் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப் படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 3:86) என்ற வசனம் இறங்கியது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை அவருக்குத் தெரிவித்த உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ 4000)
காய்ச்சலுக்கு பயந்து கொள்கையை விட்டும் வெளியேறிய குறித்த நபர் தொடர்பில் நபியவர்கள் சொன்ன வார்த்தைகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கத் தக்கவையாகும்.
“மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள்” நபியவர்கள் இஸ்லாத்தை பரப்பும் கேந்திர நிலையமாக வைத்திருந்த இடம் மதீனா என்பதினாலும், குறித்த நபர் மதீனாவில் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதினாலும் நபியவர்கள் மதீனாவைக் குறிப்பிட்டு குறித்த செய்தியை சொல்கின்றார்கள். இஸ்லாம் – இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு மாற்றமானவர்களை வைத்துக் கொள்ளாது. வெளியேற்றிவிடும் என்பதே மேற்கண்ட செய்தியின் சாராம்சமாகும். கிருத்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்று மீண்டும் கிருத்தவராக மாறியவர் ஒரு மனிதர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிரிஸ்தவராகவே மாறி விட்டார். அவர் (மக்களிடம்) முஹம்மதிற்கு நான் எழுதிக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் தெரியாது என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக் கு மரணத்தை அளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டது. உடனே (கிறிஸ்தவர்கள்) இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள் என்று கூறினர். அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு குழியைத் தோண்டினர். மீண்டும் அவரைப் பூமி வெளியே துப்பி விட்டிருந்தது. அப்போதும் இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள் என்று கூறினர். மீண்டும் அவர்களால் முடிந்த அளவிற்கு குழியை ஆழமாகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால் அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போது தான் அது மனிதர்களின் வேலையல்ல என்று புரிந்து கொண்டார்கள். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டு விட்டனர். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3617)
மேலுள்ள செய்தியில் குறிப்பிடப்படும் நபர் கிருத்தவராக இருந்து பின்னர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று, நபியவர்களின் சமுதாயத்தில் வஹி எழுதக் கூடியவர்களில் ஒருவராக இருந்து விட்டு பின்னர் மீண்டும் கிருத்தவராக மாறி காபிராகி விடுகின்றார். காபிராகியது மட்டுமன்றி நபியவர்களுக்கு எதிராக யூதர்களுடன் கைகோர்த்துக் கொள்கின்றார். இதனால் நபியவர்களுக்கோ, நபியவர்கள் சொன்ன சத்தியக் கொள்கைக்கோ எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை. இன்றைக்கு சிலர் தூய ஏகத்துவக் கொள்கையை விட்டும் தடம் புரண்டு சென்று விட்டதினால் ஏதோ ஏகத்துவக் கொள்கைக்கே நஷ்டம் ஏற்பட்டு விட்டதைப் போலவும், இதனால் தவ்ஹீத் ஜமாத் அடி அசைந்து அதல பாதாளத்தில் வீழ்ந்து விடும் என்பதைப் போலவும் சிலர் கற்பனையில் கப்பல் ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியானவர்களுக்கு மேற்கண்ட செய்தியே சமர்ப்பணம்.
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!